முதுமையில் தனிமையை விரட்ட சிறந்த ஐந்து வழிகள்

12 hours ago 13

62bc7c62-3047-42e4-8a83-13f466a0e040

ஓய்வு பெறுதல், இழப்புகள், உடல்நலப் பிரச்சினை போன்றவை இந்தத் தனிமை உணர்வுக்கான அபாயத்தை மூத்தோருக்கு அதிகரிக்கின்றன. - படம்: செயற்கை நுண்ணறிவு

தனிமை என்பது யாருமின்றித் தனியாக இருப்பது மட்டுமன்று. உறவுகள் நம்முடன் போதுமான நெருக்கம் பாராட்டாமல் இருப்பதும் தனிமையே.

அது வலிமிகுந்த ஓர் உணர்வு. ஓய்வு பெறுதல், இழப்புகள், உடல்நலப் பிரச்சினை போன்றவை இந்தத் தனிமை உணர்வுக்கான அபாயத்தை மூத்தோருக்கு அதிகரிக்கின்றன.

‘கொடிது கொடிது வறுமை கொடிது’ என்ற ஔவையாரின் புகழ்பெற்ற வரிகளின் நீட்சியாகப் பிறந்த ‘கொடிது கொடிது முதுமையில் தனிமை’ எனும் வரி மூத்தோர் தனிமையால் எதிர்கொள்ளும் சொல்லொணாத் துயரத்தை நமக்கு எடுத்துரைக்கிறது.

சமூகத் தொடர்பு, மூளைக்குச் சவால்விடும் பொழுதுபோக்குகள் ஆகியவை மூத்தோரின் தனிமையைக் குறைக்கவும் மனநிலையை மேம்படுத்தவும் மூளைத் திறன் குறைவதைத் தாமதப்படுத்தவும் உதவுவதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

முதுமையில் ஏற்படும் தனிமையைப் போக்க கீழ்க்காணும் ஐந்து பொழுதுபோக்குகள் உதவக்கூடும்.

சமூகத் தொடர்பு, மூளைக்குச் சவால்விடும் பொழுதுபோக்குகள் போன்றவை மூத்தோரின் தனிமையைக் குறைக்கவும் மனநிலையை மேம்படுத்தவும் மூளைத்திறன் குறைவதைத் தாமதப்படுத்தவும் உதவுகின்றன என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

சமூகத் தொடர்பு, மூளைக்குச் சவால்விடும் பொழுதுபோக்குகள் போன்றவை மூத்தோரின் தனிமையைக் குறைக்கவும் மனநிலையை மேம்படுத்தவும் மூளைத்திறன் குறைவதைத் தாமதப்படுத்தவும் உதவுகின்றன என உளவியலாளர்கள் கூறுகின்றனர். - படம்: ஷின்மின் நாளிதழ்

1. சமூகக் குழுக்களில் சேர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபடுதல்

தனிமையை விரட்டுவதற்கான மிகச்சிறந்த வழிகளில் ஒன்று குழுச் செயல்பாடு. புத்தக வாசிப்புச் சங்கம், நடைப்பயிற்சிக் குழு, இசைக்குழு, சமூகச் சந்திப்புகள் போன்றவை வீட்டை விட்டு வெளியே சென்று மற்றவர்களைச் சந்திக்க ஒரு வலுவான காரணத்தை உருவாக்குகின்றன.

சமூக அடையாளம் (Social identity) என்பது தனிப்பட்ட அடையாளத்துக்கு அப்பாற்பட்டு, ஒரு சிறந்த அம்சத்தின் அல்லது குழுவின் அங்கமாக இருக்கிறோம் என்ற உணர்வைத் தரும் என உளவியலாளர்கள் கூறுகின்றனர். வழக்கமான சந்திப்புகள் அந்த அடையாளத்தை வலுப்படுத்துவதோடு, அந்த வாரத்திற்கான ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்வியல் கட்டமைப்பையும் மூத்தோருக்கு வழங்குகின்றன.

உடலியக்கக் குறைபாடு உள்ளோர், ஜூம் (Zoom), கூகல் மீட் (Google Meet) போன்ற தளங்களில் நடைபெறும் இணையச் சந்திப்புகளில் கலந்துகொள்ளலாம். இவை நேரில் சந்திப்பது போலவே முகங்களை அடையாளம் காணவும் பெயர்களை நினைவுபடுத்தவும் ஒரு சீரான அன்றாட வழக்கத்தை வழங்கவும் உதவுகின்றன.

2. புதிய மொழியைக் கற்றல்: மூளைக்குச் சவால், சமூகத் தொடர்பு

தாய்மொழி அல்லாத வேற்று மொழியைக் கற்பது மூளைப் பயிற்சியையும் சமூகத் தொடர்பையும் ஒன்றிணைக்கும். ஏதேனும் ஒரு மொழிக்கான வகுப்பில் சேருவது, உங்கள் நினைவாற்றலுக்குச் சவாலாக இருப்பதுடன் ஆசிரியர்கள், சக மாணவர்கள் ஆகியோரோடு உரையாடுவதற்கான வாய்ப்பையும் உருவாக்குகிறது.

செயலிகள், சமூக மன்றங்கள் போன்றவை அதற்கான வழிகளை நமக்கு வழங்குகின்றன. மேலும், பல மொழி கற்பிக்கும் நிறுவனங்கள் மூத்தோருக்கெனத் தனிப்பட்ட பயிற்சி வகுப்புகளையும் நடத்துகின்றன.

3. செல்லப்பிராணிகள்: முதுமையில் ஓர் உன்னதத் துணை

செல்லப்பிராணிகள் எப்பொழுதும் நம்முடன் இருக்கக்கூடிய, நம்முடைய குணநலன்களில் எவ்விதக் குறைபாடும் கண்டறியாமல் நம்மை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு துணையாக விளங்குகின்றன.

மனநிலை, ரத்த அழுத்தம், அன்றாடச் செயல்பாடுகள் ஆகியவை செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் மேம்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒரு செல்லப்பிராணி மனித உறவுகளிடம் பழகும் உணர்வுக்கு மாற்றாக இருக்காது என்றாலும், தனிமையின் கடுமையான வேதனையைக் குறைக்கவும் சக மனிதர்களுடன் பழகும் வாய்ப்புகளை உருவாக்கவும் (எடுத்துக்காட்டாக, நாயுடன் நடைப்பயிற்சி செல்லும்போது மற்றவர்களிடம் பேசுவது) உதவுகிறது.

4. பழைய நட்பு வட்டத்துடன் மீண்டும் இணைந்து கொள்ளல்

முதுமையில், நீண்டகால உறவுகளைப் (Long-standing ties) பேணுவது மன நலத்திற்குப் பெரிதும் உதவும் என்று உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஏனெனில், அந்த உறவுகள் பகிரப்பட்ட இளமைக்கால அனுபவத்தையும் நினைவுகளையும் சுமந்து நிற்கின்றன. இருப்பினும், பலர் தங்களை மற்றவர்கள் நிராகரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், மற்றவர்களைத் தொடர்புகொள்ளத் தயங்குகின்றனர்.

“இன்று, உங்களைப் பற்றி நினைத்தேன். எப்படி இருக்கிறீர்கள்?” என்ற ஒரு சாதாரண குறுஞ்செய்தி, பெரும்பாலும் உறவுகளுக்கான கதவுகளை மீண்டும் திறக்கிறது.

பள்ளித் தோழர்கள், முன்னாள் சக ஊழியர்கள் அல்லது அக்கம்பக்கத்தினரைத் தேடிக் கண்டறிய மின்னிலக்கக் கருவிகள் (Digital tools) பெரிதும் உதவுகின்றன.

நட்பை மீட்டெடுப்பதற்கான ஒவ்வொரு முயற்சியும் ஓர் ஆழமான அல்லது மீண்டும் புதுப்பிக்கப்பட்ட நட்பிற்கு இட்டுச் செல்லும் என்று சொல்ல முடியாது. ஆனால், மீண்டும் உயிர்பெறும் ஒரு சிறிய தொடர்புகூட, ‘வாழ்க்கை குறுகிக்கொண்டே போகிறது’ என்ற உணர்வைக் குறைக்க உதவும்.

5. தோட்டக்கலை: மனநலத்தை மேம்படுத்தும் ஓர் அமைதியான வழி

தோட்டம், செடிகளைப் பராமரிப்பது மூத்தோரின் மனநலனைப் பேணும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அது அவர்களின் சமூகத் தொடர்பு, உடல் செயல்பாடுகள் ஆகியவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதற்குப் பெரிய தோட்டம் இருக்க வேண்டியது அவசியமில்லை. சன்னல் ஓரத்தில் வளர்க்கும் மூலிகைச் செடிகள், வீட்டு வாசலில் வளர்க்கப்படும் ஒரு தக்காளிச் செடி அல்லது சிலவகை வீட்டுத் தாவரங்கள்கூடப் போதும். அவற்றிற்கு நீர் ஊற்றுவது, தேவையற்ற இலைகளைக் கிள்ளிவிடுவது, மாற்றங்களைக் கவனிப்பது போன்ற அன்றாடப் பணிகள் மூத்தோருக்கு மனநிறைவை வழங்குகின்றன.

முதுமையில் ஏற்படும் தனிமையை ஒரு தனிமனிதத் தோல்வியாக மட்டும் கருதாமல், மாறிவரும் சமூகச் சூழலில் அது ஒரு கணிக்கக்கூடிய அபாயம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

Read Entire Article