சிங்கப்பூரில் பொதுப் பேருந்தில் அந்தக் காணொளி எடுக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட தகாத காணொளிக்கு எதிராக மெட்டா நிறுவனத்துக்கு உடனடியான செயலிழக்கச் செய்யும் உத்தரவு (Disabling Direction) காவல்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ள அந்தக் காணொளி தற்போது இணையத்தில் பார்வைக்கு கிடைக்காது என்று உள்துறை அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
காணொளியைத் தற்போது பார்வையிட முடியாமல் இருந்தாலும் அது பதிவேற்றம் செய்யப்பட்டபோது பலர் சமூக ஊடகத்தில் உள்ள வேறு சில தளங்களில் அதனைப் பகிர்ந்துள்ளனர் என்பதையும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் பொதுப் பேருந்தில் அந்தக் காணொளி எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் குரான் மறைநூலை மிதிப்பதுபோன்று தெரிகிறது.
கடந்த 2023ல் இயற்றப்பட்ட இணையக் குற்றவியல் தீங்குகள் சட்டத்தின் (OCHA) கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்பேரில் அந்தக் காணொளியை மெட்டா நிறுவனம் நீக்கியுள்ளது.
காணொளியில் உள்ள காட்சிகளை ஆராய்ந்த பிறகு, சமய நல்லிணக்க பராமரிப்புச் சட்டப்படி (1990) பிரிவு 17F(4)-கின் கீழ் ஒருவரின் சமய நம்பிக்கைக்குப் பங்கம் விளைவித்த குற்றமாக இச்செயல் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அமைச்சு உறுதி செய்துள்ளது.
“மெட்டா நிறுவனத்துக்கு ஐந்து செயலிழக்கச் செய்யும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. காணொளி தற்போது பயனாளர்களுக்கு கிடைக்காது. சில தனிநபர்கள் அந்தக் காணொளியைப் பகிர்ந்து அதனை முதன்முதலில் பதியேற்றியவர்மீது கண்டனங்களைத் தெரிவித்திருந்தாலும் புண்படுத்தும் உள்ளடக்கத்தை இணையத்தில் நிலைத்திருக்க அவர்களின் செயல் உதவியுள்ளது. இவைபோன்ற பதிவுகளைப் பொதுமக்கள் பகிர்வதைத் தவிர்த்து, காவல்துறையிடம் புகார் அளிக்கவேண்டும்,” என்று உள்துறை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
விசாரணைகள் தொடர்கின்றன. சிங்கப்பூரின் இன, சமய ஒற்றுமைக்கு எதிரான செயல்களுக்கு உடனடியான, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு எச்சரித்துள்ளது.
.png)





English (US) ·