20 ஆண்டுகால கனவு: நெல்லையின் முதல் பெண் நடத்துனர் பகவதியின் நெகிழ்ச்சி பயணம்!

2 hours ago 20

Last Updated:Mar 08, 2026 11:09 AM IST

லட்சியத்தை நோக்கிய பயணம் எத்தனை ஆண்டுகள் நீடித்தாலும், விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் ஒருநாள் வெற்றி நிச்சயம் என்பதற்கு சான்றாக திகழ்கிறார் நெல்லையில் பணியாற்றும் முதல் அரசு போக்குவரத்து கழக நடத்துனர் பகவதி.  

+

நெல்லை

நெல்லை பெண் நடத்துனர் பகவதி

தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகா, தேன்பொத்தை கிராமத்தை சேர்ந்தவர் பகவதி. போக்குவரத்து துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே பகவதியின் ஒரே இலக்காக இருந்தது. பல ஆண்டுகள் இதற்காகவே காத்திருந்த அவர், வேறு எந்த வேலைக்கும் விண்ணப்பிக்கவில்லை. இடையில் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் சில காலதாமதங்கள் ஏற்பட்டாலும், தனது முயற்சியை கைவிடவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்து துறையில் வேலைக்காக காத்திருந்த அவருக்கு, தற்போது நெல்லை அரசு போக்குவரத்து கழக பேருந்தில் நடத்துனர் பணியில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் தான் நெல்லை மாவட்டத்தில் முதல் பெண் நடத்துனர் ஆவார்.

தற்போது நெல்லையில் டவுன் முதல் ஹைகிரவுண்ட் வரையிலான வழித்தடத்தில் (3HA) தற்காலிக பேருந்து நடத்துனராக பகவதி பணியாற்றி வருகிறார். இரண்டு நாட்கள் டெப்போவில் தீவிர பயிற்சி பெற்ற அவர், மூன்றாவது நாளே பேருந்தில் டிக்கெட் கொடுக்க தொடங்கியுள்ளார். அவர் பேருந்தில் ஏறும் பயணிகள், குறிப்பாக பெண்கள், ஒரு பெண் நடத்துனரை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கிறார். "எங்கள் ஊர் பேருந்தில் ஒரு பெண் நடத்துனர் இருப்பது பெருமையாக இருக்கிறது" என்று பயணிகள் தரும் உற்சாகம், பகவதியின் சோர்வை நீக்குகிறது.

இது குறித்து நடத்துனர் பகவதி கூறுகையில், "ஆண்கள் அதிகம் பணிபுரியும் இந்த துறையில் ஒரு பெண்ணாக நுழைந்ததால், தொடக்கத்தில் எனக்கும் சில தயக்கங்கள் இருந்தன. ஆனால் இங்கு பணிபுரியும் ஓட்டுநர்களும், சக நடத்துநர்களும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருக்கிறார்கள். ‘அக்கா, இதை இப்படி செய்ய வேண்டும்’ என்று தம்பிமார்களாக இருந்து அவர்கள் கற்று கொடுப்பது எனக்கு பெரும் பலமாக இருக்கிறது.

தற்போது நான் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறேன். இந்த பணி நிரந்தரமானால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. என்னை போல இன்னும் பல பெண்கள் இந்த துறைக்கு வர வேண்டும். இதுவும் ஒரு கௌரவமான பணிதான் என்பதை உலகம் உணர வேண்டும் என்பதே என் விருப்பம். பெண்கள் வீட்டை தாண்டி சாதிக்க நினைக்கும் போது தடைகள் வருவது இயல்பு. ஆனால் அந்த தடைகளையே படிக்கட்டுகளாக மாற்றினால், எட்ட முடியாத உயரம் எதுவும் இல்லை என்பதை என் வாழ்க்கை மூலம் சொல்ல விரும்புகிறேன்” என்று பகவதி கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First Published :

Mar 08, 2026 11:09 AM IST

Read Entire Article